Thursday, June 14, 2007

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
துச்சமாக எண்ணிநம்மை தூறு செய்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பிச்சை வாங்கி உண்ணும் வாழ்க்கை பெற்றுவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
நச்சைவாயிலே கொணர்ந்து நண்பமூட்டு போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!

பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே!
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே

மகாகவி பாரதியார்

No comments: